வியாழன், 30 ஆகஸ்ட், 2012

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை! என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். நூல் புகாரி : 1903.


பொய் பேசுவதிலிருந்தும் பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்தும்...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

ரமளான் மாதத்தில் நோன்பு நோற்றிருக்கும் போது இஸ்லாம் தடுத்த தீய காரியங்களில் அறவே ஈடுபடக் கூடாது, இஸ்லாம் ஏவிய நற்காரியங்களில் இயன்றவரை ஈடுபட வேண்டும்.

ரமலான் மாதத்தில் பொய் பேசுவதிலிருந்தும் பொய்யான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்தும் யார் தன்னை தடுத்துக்கொள்ள வில்லையோ அவருடைய நோன்பு மறுமையில் ஜீரோவாக இருக்கும் என்பதையே மேற்காணும் நபிமொழி விளக்குகிறது.
இயைறச்சத்தை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் தான் மனித சமுதாயத்திற்கு நோன்பை அல்லாஹ் கடமையாக்கினான்.

நோன்பு நோற்றிருக்கும் போது (ரமலானில்) பொய் பேசுவதையும் பொய்யான (தீய) செயல்களையும் தடுத்துக்கொள்ள வில்லை என்றால் இறையச்சம் ஏற்பட வில்லை என்று அரத்தம்.

உணவையும், பாணத்தையும் மட்டும் விட்டு விடுகின்ற நோன்பு அல்லாஹ்வுக்கு தேவை இல்லை என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவதால் அல்லாஹ்வுக்கு தேவை இல்லாத ஒரு அமலுக்காக அவன் நற்கூலி வழங்க மாட்டான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு நிறுவனத்தை நடத்தக் கூடியவர் தனது பணியாளரிடம் ஒரு காரியத்தை செய்ய உத்தரவிடுகிறார் பணியாளரோ முதலாளியினின் உத்தரவுக்கு மாற்றமான ஒன்றை செய்து விடுகிறார் அதனால் முதலாளியின் நிறுவனத்திற்கு எந்த லாபமும் இல்லை.
இதனால் முதலாளி சந்தோஷப்படுவாரா ? வெறுப்படைவாரா ? கண்டிப்பாக வெறுப்படைவார்.

வெறுப்படைந்த முதலாளி இதற்கு குறைந்த பட்சம் சில நாட்களுக்கான சம்பளத்தை வெட்டுவார், அல்லது வேலையை விட்டேத் தூக்குவார் என்பதை நாம் அறிந்து வைத்திருக்கிறோம்.

முதலாளியின் நோக்கத்தை நிறைவேற்றாத காரணத்தினால் கூலியும் கிடைக்காததுடன் சிலநேரம் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்படுகிறது.

சாதாரண மனிதர்களாகிய நாமே இப்படி என்றால் ?

முழு பிரபஞ்சத்தையும் படைத்து பரிபாலிக்கின்ற படைப்பாளன் அல்லாஹ் இடுகின்ற கட்டளைக்கு மாற்றமாக அவனது அடியார்கள் செய்தால் சந்தோஷப் படுவானா ? வெறுப்படைவானா ? வெறுப்படைந்தால் கூலி கொடுப்பானா ? சிந்தித்துப் பார்க்க கடமைப் பட்டுள்ளோம்.

இதனால் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமலானில் எண்ணங்களுக்கேற்ப எழுப்பப்படுவார்கள் என்று கூறினார்கள்.

ரமளானில் அவர்களின் எண்ணங்களுக்கேற்பவே எழுப்பப்படுவார்கள் என்று இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) கூறினார். புகாரி 1901
அருள்வளம் மிக்க ரமலான் மாதத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வழங்கப்படுகின்ற அபரிமிதமான நற்கூலிகளை அடைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் நோன்பு நோற்றோம் என்றால்

*வழமையாகப் பேசுகின்ற பொய்யையும்,

*வழமையாக வியாபாரத்தில் செய்யும் கலப்படத்தையும், நிருவையில் செய்யும் மோசடியையும்,

*சக மனிதர்களுக்கு செய்யும் துரோகத்தையும்,

*உள்ளத்தைக் கெடுத்து சிந்தனையை சீர் குலைக்கும் கேளிக்கைகளில் ஈடுபடுவதையும்,

* இஸ்லாம் தடை செய்த இன்னும் பிற தீமைகளையும் தடுத்துக் கொள்ள வேண்டும்.

தடுத்துக் கொண்டால் ரமலானில் இறையச்சத்தை ஏற்படுத்தும் ஏகஇறைவனின் நோக்கம் நிறைவேறியதாக கருதப்படும் இதன் மூலம் அல்லாஹ்விடமிருந்து கணக்கின்றி நற்கூலிகளை அறுவடை செய்து கொள்ளலாம்.

மீறினால் அவருடைய நோன்பு மறுமையில் ஜீரோவாக இருக்கும் நிலை ஏற்படலாம் அதிலிருந்தும் கருணையாளனும், கொடையாளனுமாகிய வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் காத்தருள வேண்டும்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


مَّثَلُ الَّذِينَ يُنفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللّهُ يُضَاعِفُ لِمَن يَشَاء وَاللّهُ وَاسِعٌ عَلِيمٌ {261}

2:261.தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.



வாரி வழங்குவோம்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நபி(ஸல்)அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல்(அலை) ரமலான் மாதத்தில் நபி(ஸல்)அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி(ஸல்) அதிகமதிகம் வாரி, வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல்(அலை)ரமலானின் ஒவ்வொரு இரவும் -ரமலான் முடியும்வரை நபி(ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல்(அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக்காற்றை விட அதிகமாக நபி(ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள். நூல் புகாரி. 1902

ரமளான் மாதத்தில் பெருமானார்(ஸல்) அவர்கள் சடைவடையாமல் தர்மம் செய்யக் கூடியவர்களாக இருந்துள்ளார்கள் என்பதால் தான் மழைக்காற்றை விட வேகமாக வாரி வழங்குவார்கள் என்ற உதாரணத்தை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறி இருக்கின்றார்கள்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய வழி முறையை நாமும் நம்மால் இயன்றளவு பின் பற்றி தேவையுடையோருக்கு வாரி வழங்க முன் வரவேண்டும்.

அவ்வாறு தேவையுடையோருக்கு வாரி வழங்குவதால் நம்முடையப் பொருளாதாரம் குறைவதில்லை மாறாக அவற்றை அல்லாஹ் பல்கி பெருகச்செய்வதாக கீழ்காணும் திருமறை வசனத்தில் கூறுகின்றான்.

2:261.தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தர்மம் செய்வதால் இரண்டு நன்மைகள் கிடைக்கிறது,

  • தர்மம் செய்பவரின் பொருளாதாரத்தில் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அபிவிருத்தி ஏற்படுகின்றது.
  •   தர்மம் செய்ததற்கான நன்மைகள் எழுதப்;படுகின்றன.
மேற்காணும் இரண்டு நற்பாக்கியங்களும் குறைவின்றி நமக்கு கிடைக்க வேண்டுமென்றால், கீழ்காணும் விதம் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தர்மம் செய்யும் விஷயத்தில் ஏவியவைகளை செய்யவேண்டும், தடுத்தவைகளை தடுத்துக் கொள்ள வேண்டும்.  

ரமளான் மாதத்தில் சடைவடையாமல் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்ந்த அண்ணல் நபி(ஸல்) அவர்கள் தங்களிடம் உதவிக் கேட்டு வந்தவர்களை எதாவது ஒருக் காரணத்தைக் கூறி திருப்பி அனுப்பியதில்லை.

  • உதவி கோரியவர்களுக்கு தங்களால் இயன்றளவு உதவிகளை செய்து அனுப்புவார்கள் அவர்களிடத்தில் கொடுத்து உதவ ஏதுமில்லை என்றால் உதவிக் கோரியவர்களை அழைத்துக் கொண்டு தங்கள் தோழர்களிடத்தில் சென்று இவர்களுக்கு உங்களால் இயன்றளவு உதவி செய்யுங்கள் என்று பரிந்துரை செய்வார்கள்.
  • ஒரு குழுவாக உதவி கேட்டு வந்தால் மிம்பரில் ஏறி நின்று மக்களை அழைத்து தர்மம் செய்வதற்கு ஆர்வமூட்டும் திருமறைக் குர்ஆன் வசனங்களை எடுத்துக்கூறி உருக்கமாக உரை நிகழ்த்தி மக்;களின் உள்ளங்களை அந்த ஏழைகளின் மீது ஈர்க்கச் செய்து விடுவார்கள்.
சிறிது நேரத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ளதை கொண்டு வந்து கொட்டி அவர்களின் பையை நிறைத்து அனுப்புவார்கள்.    

நபி(ஸல்)அவர்களிடம் எவரேனும் யாசித்து வந்தால் அல்லது தேவையை முறையிட்டால் உடனே அவர்கள் (பிறரிடம்), '(உங்களால் இவர் போன்றவர்களுக்கு உதவ முடியாவிட்டாலும் அவர்களுக்கு உதவும்படி) பரிந்துரை(யாவது) செய்யுங்கள் (இவ்விதம் பரிந்துரைத்ததற்காக) நீங்கள் (நற்)கூலி கொடுக்கப்படுவீர்கள். அல்லாஹ், தான் (அவருக்குக் கொடுக்க) நாடியதை, தன் தூதருடைய (என்னுடைய)நாவினால் நிறைவேற்றித் தருவான் எனக்கூறினார்கள். 1432. அபூமூஸா(ரலி) அறிவித்தார்.

இன்று நம்மில் பலரிடம் இருந்தால் கொடுக்கின்றோம், இல்லை என்றால் இல்லை என்றுக் கூறி ஒதுங்கி விடுகின்றோம்,

நம்மிடம் இல்லை என்றாலும் உதவிக் கோரி வந்தவர்களை நம்முடைய நண்பர்களிடம், உறவினர்களிடம், உதவி செய்யும் மனப்பான்மை உள்ளவர்களிடம் அழைத்துச் சென்றுப் பரிந்துரை செய்ய வேண்டும், அவர்களிடமும் எதுவும் கிடைக்க வில்லை என்றால் தொண்டு நிருவனங்களிடம் அழைத்துச் சென்று பரிந்துரை செய்; வேண்டும். இவ்வாறான எல்லா வழிகளிலும் முயற்சி செய்ய வேண்டும். இதுவே நபி வழி.

இவ்வளவு தான் என்ற வறையரை.
இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் என்று வறையருத்துக் கொடுப்பது அல்லாஹ்வின் புறத்திலிருந்து நம்முடைய பொருளாதாரத்தில் ஏற்படும் அபிவிருத்திக்கு இடும் முட்டுக்கட்டையாகும். 

நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். 'அப்தாவின் அறிவிப்பில், 'நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் நூல் புகாரி 1433.

தடுத்துக் கொண்டால் ?
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர், தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து, விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது. 1444 என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

படிப்பினைகள்
அல்லாஹ்வுக்காக என்ற சிந்தனையில் தான தர்மம், மற்றும் தஃவாப் பணிகளுக்கு வாரி வழங்கினால் வாரி வழங்குபவர்களின் பொருளாதாரத்தை அல்லாஹ் பல்கிப் பெருகச் செய்வான்.

இவ்வளவு தான் கொடுக்க வேண்டும் இதற்கு மேல் முடியாது என்று சிறயளவில் வழங்கினாலும், அதே அளவே அல்லாஹ்வும் வழங்குவான்.

கொடுக்காமல் தடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் நெருக்கடி ஏற்படும்.
நோன்பு அல்லாஹ்வுக்குரியது என்று அல்லாஹ் கூறுவதால் அல்லாஹ்விற்காக நோன்பு நோற்றிருக்கும் புனித ரமளான் மாதத்தில் தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் தியாகப் பணியில் ஈடுபட்டால் அவற்றிற்காக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எண்ணிலடங்காத நன்மைகளை வாரி வழங்குவான்.

புனித ரமளான் மாதத்தில் அண்ணலார் அவர்களின் அழகிய வழிமுறையை பின்பற்றி நாமும் நம்மால் இயன்ற அளவு தர்மம் செய்து அல்லாஹ்வின் பேரருளை அடைந்து கொள்வதற்கு முயற்சி செய்வோம்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை .எம்.பாரூக்